Saturday, April 30, 2022

நல்ல மனுஷன் | வாக்குத்தத்த வார்த்தை | மே 2022 | தேவநிழல் ஊழியங்கள்

 





நல்ல மனுஷனுடைய நடைகள்  கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை;  கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங்கீதம் 37:23-24)

நம்முடைய சிறுபிள்ளை பருவத்திலிருந்தே, நாம் எந்த மதப்பின்னணியிலிருந்து சேர்ந்திருந்ந்தாலும், எந்த குடும்பப் பின்னணியை சேர்ந்திருந்தாலும், நமக்கு சொல்லப்படும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று, “நீ நல்லவனாக இரு” என்பதே.  ஏன்? நம்முடைய தாத்தாபாட்டிகளும் தம் பேரப்பிள்ளைகளை பார்த்து சொல்லும் ஒரு பொதுவான ஆசீர்வாத மொழி, “ராசா, நீ நல்லா இருக்கணும்”.

நல்லவன் அல்லது நல்ல மனுஷன்  என்பதன் அர்த்தம் என்ன?

 

பல சமயங்களில், ஒருவர் நல்லவர் அல்லது கெட்டவர்  என்று நாம் கணக்குபோடுவதே அவருடைய ஆள்த்தத்துவம், ஒழுக்கம், நடவடிக்கை போன்றவைகளை வைத்துத்தான்.  நாம் பொதுவாகவே தோற்றத்தின்படியே தீர்ப்பு செய்கிறோம்.  இன்றைக்கும் தங்கள் கோடிக்கணக்கான பணத்தை ஏழைஎளிய மக்களுக்கு உதவக்கூடிய தொண்டுபணிகளுக்கு வாரிவழங்கும் பிரபலங்கள் உண்டு.  நிச்சயமாக, இவர்களின் ஈகை அனேகரின் பசியை போக்கி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்புகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.  சொல்லப்போனால், அவர்களால வாழ்வடையும் மக்களுக்கு இவர்கள் “கண் கண்ட தெய்வங்கள்!”. ஆனாலும் அது மட்டுமே அவர்களை ‘நல்லவர்கள்’ என்று ஆக்கிவிடுமா?

 

நல்ல மனுஷன் யார்?  கர்த்தருடைய வசனம் யாரை நல்லவன் என்று அடையாளங்காட்டுகிறது?

 

ஆச்சரியமான கேள்வி

 

மத்தேயு 19:16,17 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;  அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

  

இளம் செல்வந்தன் ஒருவன் இயேசுவிடம் வந்து நித்திய வாழ்வை அடைவதற்கான வழி எதுவென்று கேட்கிறான். இயேசு அதற்கான பதிலை அளிக்கும் முன் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவ்வாலிபனை பார்த்து, “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்” என்றார்.  அதைக் கேட்ட வாலிபன் சற்று அதிர்ந்துபோயிருப்பான்.  நன்மையின் ஒட்டுமொத்த உருவமானவர்  “நல்லவன்” என்ற பட்டத்தை தனக்கு சூட்டிக்கொள்ளவில்லை. அப்படியானால், நல்ல மனிதனை நாம் எங்கு காணலாம்? சங்கீதங்களில் புத்தகத்திலிருந்து மேற்கோள்காட்டி அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறார்,   அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10-12) .இப்போது சிக்கல் மேலும் வலுக்கிறது.

 

நல்ல மனிதனை எங்கே கண்டுபிடிப்பது?

 

நல்லவன் ஆக்கப்படும் மனிதன்

ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இயேசு சொன்னார் பிதா ஒருவரே நல்லவர். பவுல் சொல்லுகிறார்  தேவனை தேடாததினாலேயே மனிதன் கெட்டவனாக உள்ளான்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் மற்றும் தியாக மரணத்தினாலேயே ஒருவன் நீதிமான் (அல்லது நல்லவன்) என்று ஆக்கப்படுகிறான். ஆனால் இந்த செயல்முறை அங்கேயே நின்றுவிடுவதில்லை. உண்மையில் இது அங்கு தொடங்குகிறது. நல்லவர்களாக மாற்றப்பட்டவர்கள் நல்லவர்களாய் இருக்கவேண்டும் அல்லது நற்கனிகளை கொடுக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.  இயேசு சொன்னார்: நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான் (மத்தேயு 12:35).

ஒரு மரம் (மனிதன்) அதன் கனியினால் அறியப்படும்:  அவன் என்ன கொடுக்கிறான்/என்ன செய்கிறான்/எப்படி நடந்துகொள்கிறான்?  அவன் வெளியரங்கமான நடவடிக்கை எப்படி உள்ளது?

 

நல்ல மனிதன் தன் இருதயத்திலுள்ள நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்து கொடுக்கிறான்: அவன் யார்/அவன் எப்படி சிந்திக்கிறான்/அவன் உள்ளத்தில் இருப்பது என்ன??எப்படி உணருகிறான்?

 

நம்முடைய தேவனை பொறுத்தமட்டில், நல்ல (சுத்திகரிக்கப்பட்ட) சிந்தனைகளும் நல்ல (சுயநலமற்ற) செயல்களுமே ஒருவனை நல்லவன் ஆக்கிடும்.    

 

உறுதிப்படுத்துவார், பிரியமாயிருப்பார், தாங்குவார்

 

எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.(சங்கீதம் 90:17)

 

நல்ல மனுஷனுக்கு தேவன் நிறைவான ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். பொருளாதாரம், வேலை, ஆஸ்தி, அந்தஸ்து போன்ற ஆசீர்வாதங்களை விட தேவனால் நடத்தப்படும் உறுதி நமக்கு இருப்பது மிகவும் மேன்மையானது. நம்முடைய போக்குவரத்து, நம்முடைய திட்டங்கள், நம்முடைய பிரயாசங்கள், நம்முடைய கல்விக் கனவுகள்,  நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கை, திருமண ஒப்பந்தங்கள் போன்ற ஒவ்வொன்றும் அவரால நடத்தப்படும் உறுதி. இந்த ஒவ்வொரு பகுதிகளிலும்   

நமக்கென்று சில திட்டங்கள், சில நோக்கங்கள் இருக்கும்.  ஆனால், அவைகள் தேவனால் உறுதிப்படும்போது, ஒருவராலும் அதனை கெடுக்கவோ நிறுத்தவோ முடியாது. வேதம் சொல்லுகிறது. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங்கீ 127:1)

.

எண்ணாகமம 14:8 கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்தின் இரும்பு களவாயிலிருந்து மோசே என்பவரால் மிட்கப்பட்டார்கள்.  மோசே அம்மக்களை எகிப்திலிருந்து விடுவித்து வாக்குத்தத்த பூமியான கானாணுக்குள் அழைத்துசெல்லவேண்டும் என்பதே தேவதிட்டம்.  ஆனாலும், அவர்களுடைய வனாந்திர யாத்திரையில், வழியின் நிமித்தம் அவர்கள் தங்கள் தலைவன் மோசேவை குறித்து முறுமுறுத்து எகிப்திற்கு திரும்புவது நல்லது என்று முறையிட்டார்கள். படைத்தளபதி யோசுவா அவர்களை பார்த்து சொன்னது என்னவென்றால், கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்”.  நாம் எவ்வாறு கர்த்தரை பிரியப்படுத்தலாம்? பலவிதங்களில். அதிலே மிக பிரதாமானது விசுவாசம் (1)
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்கு பலனளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (2) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

சங்கீதம் 18:35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

சங்கீதக்காரன் அடிக்கடியாக தேவனை குறிப்பிடுகையில் தன்னை தாங்குகிறவர், தப்புவிப்பவர், தூக்கிஎடுப்பவர், விழாமல் காப்பவர், வழுவாமல் காப்பவர் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.  அறிந்தே விழும் மக்களையும் அவர் தூக்கிநிறுத்த வல்லவர். பேதுரு அமிழ்ந்துபோவோம் என்று நிலைக்கு வந்தபோது, இயேசு அவனை வெறுமனே கடிந்துகொள்ளவில்லை, தன்னுடைய கையை நீட்டி அவனை தூக்கிவிட்டார்.  சங்கீதக்காரன் மேலும் அறிவிப்பது என்னவென்றால், “கர்த்தர் நீதிமானை தாங்குகிறார் (சங்கீதம் 37:17). கர்த்தரால் உயர்த்தப்படுவது உண்மையில் நீதிமானுடைய மாபெரும் சிலாக்கியம்.  நல்லவர் – சிந்தை மற்றும் செயலில் – எல்லோரையும் தேவன் தூக்கி நிறுத்த விரைகிறார்.  ஆம்.  ஒரு நல்ல மனிதனுக்கு இது தேவனுடைய அற்புதமான வாக்குத்தத்தம்.

 

ஐந்து வகையான வெளிப்பாடு

மத்தே 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

 

நல்ல மனுஷன் யார்?

 

சிந்தனை மற்றும் செயலில் நல்லவராக வாழந்துகாட்டியவர் இயேசு.  அவர் சிலுவையை சுமந்தாலும், மனுகுலத்திற்காய் தேவன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்தைவிட மேலான ஒரு நாமத்தை தேவன் அவருக்கு வழங்கினார்.

 

இன்றைக்கும் பரிசுத்த ஆவியின் நிறைவோடு தேவனுடைய வல்லமை மற்றும் தேவசமூகத்தை நாடும் விசுவாசியான நீங்கள்,  “தேவனுக்கு பயப்படும் மனுஷனாக, மனுஷியாக’ நீங்கள் வாழந்தால், நீங்கள் நடந்தால், ஏற்ற சமயத்தில் நீங்களும் உயர்த்தப்படுவீர்கள். அல்லேலூயா!

 

இவைகளை நாம் இன்னும் தெளிவாய் புரிந்துகொள்ள, சுவிசேஷ நூல்களில் எழுதப்பட்டுள்ள ஒருசில சம்பவங்களை, சில மனிதரை நாம் கவனிப்போம்.  இவர்கள்/இச்சம்பவங்கள் நல்ல மனிதனுடைய சுபாவங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது மட்டுமல்ல, நாமும் நல்ல மனுஷனாக, மனுஷியாக வாழ நமக்கு சவால் விடுக்கிறது.

 

1.நல்ல சமாரியன் – அயலானை பற்றிய அக்கறை (லூக்கா 10:30-37)

லூக்கா 10:33 பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

இக்கதையில், கள்வர் கையில் அகப்பட்டு சாலையில் சாகக்கிடக்கும் நபரை ஒரு மனிதன் பார்க்கிறான். நண்பனை போல் அவன்மேல் மனதுருகி அவனுக்கு தேவையான முதலுதவிகளை வழங்கி அவனை சத்திரத்தில் சேர்க்கிறான், அவனுடைய மருத்துவ செலவுகளையும் பொறுப்பேற்கிறான்.  உன் அயலான் யார்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இக்கதையை இயேசு சொன்னார்.  அயலான் என்பவன் ஏதோ உன் அருகில் இருப்பவன் அல்ல, தேவையில் உள்ள மனிதன் ஒவ்வொருவனும் உன் அயலான் என்று இயேசு சொன்னார்.  ஒருவேளை, எல்லா சமயத்திலும், எல்லாருக்கும், எல்லா விதத்திலும், அந்த சமாரியனைப் போன்று நம்மால் உதவமுடியாது.  ஆனால் அந்நியர், அயலானை குறித்து ஒரு பார்வை, ஒரு அக்கறை, ஒரு கரிசனை நமக்கு, எப்போதும் இருக்கவேண்டும். நாமுண்டு, நம் வேலையுண்டு, என் குடும்பமுண்டு என்று வாழ்வது கிறிஸ்தவ பண்புநலனே அல்ல! உங்களால் இயன்றதை யாருக்கு முடியுமோ அவர்களுக்கு செய்யுங்கள்! நல்ல மனுஷராக இருந்திடுங்கள்!

 

2.நல்ல தகப்பன் – உறவுகளின் மேல் பரிவு (லூக்கா 15:11-15:32)

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக்கா 15:20)

 

ஒரு பணக்கார தகப்பனின் இளையமகன், சொத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கை பெற்றுக்கொண்டு முறையற்ற வாழ்க்கையில் அதனை செலவழித்து ஒன்றும்மில்லாதவனான்.  நிச்சயமாய் கஷ்டப்பட்டு சம்பாதித்து சோத்து சேர்த்த எந்த ஒரு  தகப்பனாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவனை திரும்பசேர்த்துக்கொள்வது இருக்கட்டும், ஒரு சாதாரண அவனை பல்வேறு வார்த்தைகளால் தீட்டித் தீர்த்து தொலைந்துபோ என்று சொல்லியிருப்பார். ஆனால் இக்கதையில் வரும் தகப்பன் வித்தியாசமாக நடந்துகொள்கிறார். அவனுடைய அண்ணனின் எரிச்சலடைய, அவனுடைய தகப்பன் திரும்பி வந்த இளையகுமாரனை அன்போடு அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார். இது எப்படி சாத்தியம்? இதுதான் தகப்பனின் அன்பு.  இப்படித்தான் இருக்கவேண்டும் தகப்பனின் அன்பு.  தகப்பன் மட்டுமல்ல. குடும்ப உறவுகள் ஒவ்வொருவரும் மற்றவர்மேல் காட்டவேண்டிய  அன்பு, மனதுருக்கம், மன்னிக்கும் தன்மை இதுவாகவே இருக்கவேண்டும்.  நீங்கள் எவ்வளவு நல்ல தகப்பன், தாய், கணவன், மனைவி, மகன் அல்லது மகளாக இருக்கிறீர்கள்?  உங்கள் சொந்த குடும்பத்தாருடன் எப்பேர்ப்பட்ட உறவை பரிபாலிக்கிறீர்கள்?  நீங்காத கசப்புடன் வாழ்கிறீர்களா அல்லது மறப்போம், மன்னிப்போம், மீண்டும் இணைவோம் என்று இருக்கிறீர்களா?  இந்த தகப்பனை சற்று பாருங்கள். இவர் நம் பரமபிதாவுக்கு ஒப்புமையாக இருக்கிறார்.  ஒரு நல்ல மனிதன் (அல்லது மனுஷி) குடும்ப உறவுகள் தவறினாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக்கொள்வான்.  

 

3.நல்ல வேலைக்காரன் – எஜமானுக்கு உண்மை (மத் 24:45-51, மத் 25:14-30)


ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? (மத் 24:45)

 வேலைக்காரன் தன் எஜமானுக்கு காண்பிக்கவேண்டிய உண்மையை குறித்து இயேசுவானவர் இரண்டு உவமைகளை சொன்னார். பொதுவாகவே, கர்த்தருடைய வருகைக்கான ஆயத்தத்தை நமக்கு கற்பிக்கும்படி இக்கதைகள் நமக்கு சொல்லப்பட்டாலும், தொழில்முனைவர் (அ) முதலாளி மற்றும் தொழிலாளி (அ) வேலைக்காரனுக்கு இடையே உள்ள உறவினையே இவைகள் முக்கியப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்.  இன்றைக்கும் பல இடங்களில், வேலையாட்கள் பொதுவாகவே ஒரு திருப்தியற்ற மனநிலையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவோம். தொழிலாளர்கள் நம்பிக்கை துரோகம், பண மோசடி மற்றும் கொலைக்குற்றங்களுக்கு ஆளாவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  இன்னொரு பக்கம் மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பளம், நேரம், ஆதாரங்களுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை என்பதை கேள்விப்படுகிறோம். முதலாளிகள் தொழிலாளிகளை கசக்கி பிழிவதும், வேலைக்காரர்கள் முதலாளிகளை ஏமாற்றுவதும் இன்றைக்கும் அதிகரித்துவருகிறது.

 

இந்த கதைகளிலே, இயேசுவானவர் நல்ல மேலாளர் மற்றும் நல்லா பணியாளரை நமக்கு முன்னிலைப்படுத்துகிறார்.  ஒரு நல்ல தொழிலாளி தன் முதலாளி தனக்கு கொடுத்த பொறுப்பை, கண்காணிக்கபடாமலேயே, கருத்துடன் நிறைவேற்றுவார்.  ஒரு நல்ல வேலைக்காரன் தன்னுடைய தாலந்து திறமையை எல்லாம் தன் எஜமானனின் பிரயோஜனத்திற்காக பயன்படுத்துவான். அதேபோல், ஒரு நல்ல எஜமான் தன் வேலைக்காரனின் உண்மையை அங்கீகரித்து அவனுக்கு பதவிஉயர்வு வழங்கிடுவான்.  ஒரு நல்ல முதலாளி தன் வேலைகாரனின் திறனை அங்கீகரித்து அவனுக்கு ஊதிய உயர்வை அளித்திடுவார்.  நீங்கள் ஒரு வேலைக்காரனாகவோ அல்லது எஜமானனாகவோ இருக்கலாம். நீங்கள் எவ்வளவு நல்லவர், உண்மையுள்ளவர், பிரயோஜனமுள்ளவர்? உண்மையற்ற ஊழியர்கள், உண்மையில்லா எஜமானங்கள் தேவனால் கடினமாய் கையாளப்படுவார்கள்! நல்ல வேலைக்காரனாகவும், நல்ல எஜமானனாகவும் இருந்திடுங்கள்!

 

4. நல்ல நண்பன் – சிநேகிதரை கட்டியெழுப்புதல் (யோவான் 21)

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.(யோவான் 21:17)

 

இயேசுவானவர் தன்னுடைய 3-1/2 ஆண்டுகால ஊழியத்தில், ஒருசிலரை தம்மோடு கூட இருக்கும்படிக்கு, தம்முடைய சீடர்களாக நியமித்தார். தான் பரமேறினபோது, தன் ஊழிய பொறுப்புகளை தன் சீடர்வசம் ஒப்புவித்து சென்ற இயேசு அவர்களை ஒரு காலத்தில் சிநேகிதர்கள் என்றே அழைத்தார்.  ஒரு கட்டத்தில், இயேசுவை அதிகமாய் நேசித்த பேதுருவே பின்மாற்றமடைந்தார்.  அவர் மறுத்ததுமட்டுமல்ல, தன் அழைப்பையே விட்டுவிட துணிந்தார். இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான் (நீதி 27:17) ஒரு நல்ல நண்பராக இயேசு பேதுருவை தள்ளிவிடவோ, கைவிடவோ, துரத்தவோ யில்லை.   அழைக்கப்படவனுக்கு பின்னே அழைத்தவர் சென்றார்! மனமுடைந்த சீடனை தேடி மன்னவன் இயேசு போனார்.  ஒரு நண்பனிடம் உரையாடுவதுபோல் அவனிடன் உறவாடினார்.  அது பேதுருவின் நெஞ்சை கரைத்தது. அந்நேரம்  முதற்கொண்டு அவன் திரும்பிப்பார்க்கவே   இல்லை. பலவேளைகளில், நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்களும் நம்மைவிட்டு போகலாம்.   அவர்களுடைய  துரோகத்தை நாம் எப்படி கையாள்கிறோம்?  கசப்பையும் கோபத்தையும் காயத்தையும் நித்தமும் பிடித்துக்கொண்ட பிழைக்கிறோமா?  அவர்களை ஒதுக்குகிறோமா? அவர்களை தள்ளிவைக்கிறோமா? ஒரு நல்ல நண்பனாக இயேசு பேதுருவை ஜெயித்தார். பெந்தேகோஸ்தே நாளில், பேதுருவின் ஒரு பிரசங்கத்தினால் 3000 பேர்   இரட்சிக்கப்பட்டார்கள்.

 

5.நல்ல சீடன் – தேவனுக்கு கீழ்ப்படிபவன் (மத்தேயு 10:37-39)

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன (லூக்கா 9:23)

ஒரு நல்ல மனுஷனுக்கு அந்நியரை பற்றிய அக்கறையும், உறவினர் மேல் மனதுருக்கமும், வேலையாள்/எஜமான்கள் குறித்த விஷயத்தில் உண்மையும், நண்பர்களை கட்டியெழுப்பும் பொறுப்பும் இருக்கவேண்டும். ஆனாகாட்டிலும் மேலானதொன்று உண்டு. இன்றைக்கும், இயேசுவை அப்பத்திற்காக சுகத்திற்காக, அதிகாரத்திற்காக தேடுவோர் உண்டு. ஆனாலும், இயேசுவின் பார்வையில் நல்ல மனுஷன் என்று பெயரை பெறத்தக்க சீடன் யார்? இயேசுவானவர் அதனை இரண்டு எளிய வாக்கியங்களில் சொல்லுகிறார்: தன் பெற்றோர்/பிள்ளைகளை காட்டிலும் இயேசுவை அதிகமாய் நேசிப்பவன்.  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவருக்கு பின்னே செல்பவன். அதன் பொருள் என்ன? அது பெற்றோரை விட்டுவிட்டு இயேசுவை நேசிப்பதல்ல.  அது அவரை எல்லாவாற்றிற்கும் அதிகமாக நேசிப்பது!  அது வெறுமனே பின்பற்றுவதல்ல.  அது சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுவது.

 

சகோதர சகோதரிகளே, மகன் மகள்களே, இயேசுவை பின்பற்றுவது அல்லது விசுவாசியாக இருப்பது .ஏதோ சபைக்கு வருவது சந்தா செலுத்துவதன்று.  நல்ல கிறிஸ்தவன் என்ற வார்த்தையில் நல்ல என்று முன்னொட்டு வசியமற்றதாகும். ஏனெனில் நல்லவர் அல்லாதோர். கிறிஸ்தவராக இருக்கமுடியாது.  கிறிஸ்து நல்லவர் என்றால், அவரை பின்பற்றுவோர் கெட்டவராக இருக்கமுடியாது. நிச்சயமாகவே, இயேசுவை ஏற்றுக்கொண்டதும் ஒருவர் தானாக நல்லவராவதில்லை. அவர் நல்லவர் ஆக்கப்படுகிறார். அது ஒரு தொடர் செயல்முறை.  நல்ல நபராக இருக்க நற்கிரியைகளை செய்ய அவர் ஒவ்வொரு கிறிஸ்தவரையும் செதுக்குகிறார், உருவாக்குகிறார்.  அது மட்டுமல்ல, இந்த சுபாவத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு சிறப்பான வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார்.

 

1)   அவனுடைய நடைகள், அவனுடைய வாழ்க்கை கர்த்தரால் உறுதிப்படும்.

2)    அவனுடைய வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும்

3)    அவன் விழுவதில்லை, அவன் விழுந்தாலும் கர்த்தர் அவனை தாங்குவார்

 

கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் நல்லவர்களாக நடக்க, நல்ல சமாரியனாக இருக்க, நல்ல வேலைக்காரனாக செயல்பட, நல்ல சிநேகிதனாக வாழ, நல்ல சீடனாக இருக்க உதவிசெய்வாராக!

 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிபபராக!

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...