Tuesday, May 11, 2021

கொந்தளிக்கும் அலைகள் (3/14) : மருந்து சீட்டு

 


கொந்தளிக்கும் அலைகள் (3/14)

மருந்து சீட்டு

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் (மல்கியா 4:2)

சமீபத்தில் நான் வாசித்த செய்தி ஒன்று இப்படியாக தெரிவிக்கிறது.  பரிசோதிக்கப்பட்ட 100-பேரில் 25-பேருக்கு தொற்றுள்ளதாம்.  அப்படியானால் பரிசோதனைக்கு வராதோரை குறித்த காரியம் என்ன? அறிகுறி இல்லை ஆதலால் பரிசோதிக்கவில்லை என்பவரின் கதை என்ன?  இம்முறை தொற்று அதி தீவிரமாய் பரவுவதால், எந்த திசையில் திரும்பினாலும் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள், குடும்பங்கள்.  யோசிக்கவே பயமாக இருந்தாலும், இது தான் உண்மை!  இன்று நாம் சந்திக்கும் யதார்த்தமும் இதுவே.

அறிகுறிகளை உணரத் தொடங்கியதுமே, நமக்கு ஏற்படும் அடுத்த பிரதிபலிப்பு பதற்றம்.  நான் டெஸ்ட எடுக்கவேண்டுமா?  அது மட்டுமா?  நம்மை சுற்றிலும் உள்ள சமூக ஊடகங்கள் நமக்கு பல்வேறு போதனைகளை, பற்பல மருத்துவங்களை, பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை பரப்பிக்கொண்டே உள்ளது - சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, அலோபதி.   நீராவி எடுங்கள், கசாயம் குடியுங்கள், இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள்….எத்துனை மருத்துவங்கள், எத்துனை ஆலோசனைகள்!  எல்லாம் நல்லது தான். சந்தேகமில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, சில தீர்வுகள் சிலருக்கு உதவுவதில்லை.  இணை நோய் உள்ளவர்களுக்கு வேறுவிதமான சிகிச்சையை தரவேண்டியிருக்கும்.   நூற்றுக்கணக்கான தீர்வுகள், எண்ணற்ற மருத்துவ ஆலோசனைகள்.   ஆனாலும் இந்த தொற்று நம்முடைய உயிரை எடுக்கிறது.   ஏன் இன்றும் நமக்கு ஒரு சரியான மருந்தில்லை?   

மருத்துவரின் மருத்துவம் ஒருவேளை காலத்திற்கு ஏற்ப மாறலாம்.   வைத்தியரின்  ஆலோசனையும் எல்லா நேரமும் நமக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம்.   ஆனாலும், எல்லா சமயத்திலும்  உதவக்கூடிய தீர்வு ஒன்றுண்டு.   தெய்வீக மருத்துவரால் நமக்கு அருளப்பட்ட ஒரு தெளிவான தீர்வு.  பரிசுத்த வேதாகமத்தில் உள்ள காலத்தால் அழியாத மருத்துவம்.

இந்த மருந்தை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவை அன்று….ஒரு நாளின் 24 மணி நேரமும் எடுத்துக்கொள்ளவேண்டும்!  அந்த மருந்து எது?

1.துதிக்கும் உதடுகள்: வியாதியா? பெலவீனமா? முனகலும் புலம்பலும்  அல்ல நம் மருந்து.  கர்த்தரை துதிக்கும் துதியே! கர்த்தரை பாடும் பாடலே நம்  மருத்துவம்.   பவுலும் சிலாவும் துதித்து பாடியது பயங்கரமான வலி வேதனையில் தான் என்பதை நாம் மறக்கக்கூடாது.   அந்து துதியே சிறைக்கைதிகளை விடுவித்தது ( சங்கீ 34:1)

2.நேர்மறை அறிக்கைகள் :  தொற்று உறுதியாகிவிட்டதா? ஆனால் என்ன?  அதனால் நாம் பயப்படவேண்டுமா? கவலைப்படவேண்டுமா?  கலக்கமடையவேண்டுமா?   தொற்றல்ல விசுவாசம் உறுதியாகவேண்டும்.   நேர்மறையான விசுவாச அறிக்கைகளை செய்திடுங்கள் (சங்கீ 23)  

3.பொறுமை எனும் கனி:   வியாதியுற்ற ஒருவரின் அடுத்த பெரிய பிரதிபலிப்பு பதற்றம்.  ஒருவித எரிச்சல், கோபம், விரக்தி நம்மை தாக்கி நம் இயல்பு வாழ்க்கையை பாதித்துவிடுகிறது.  வியாதி வந்தவுடன் போகவேண்டும் என்று நினைக்கிறோம்.   பொறுமை அவசியம்  (ரோமர் 12:12)

4.உள்நோக்கு பார்வை:  வியாதி அல்லது பெலவீன நேரத்தில் நாம் தேவனிடத்தில் ஏன், எதற்கு என்று கேட்பதற்கு பதில், நம்மை நாமே சுயபரிசோதனை செய்யவேண்டும்.  ஏன் எனக்கு மட்டும் என்று கேட்பதல்ல?  நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து தேவனோடு ஒப்புவரவாகவேண்டிய ஒரு நேரம்.   தாவீது ராஜா உபத்திரவத்தின் பாதையில் செல்லுகையில்,  தேவன் தம் இருதயத்தை சுத்திகரிக்கவேண்டும் என்று மன்றாடினான் (சங்கீ 139:23)

5.வார்த்தையின் தியானம்: ஐந்தாவதும் மிக முக்கியமானதுமான மருத்துவம் கர்த்தருடைய வசனத்தை தியானிப்பதுமாகும்.   வியாதி பொதுவாக இருளையும், கலக்கத்தையும்,  சோர்வையும் உண்டுபண்ணும்.   கர்த்தருடைய வசனமே நமக்கு வெளிச்சத்தை கொடுக்கும் (சங்கீ 119:130)

ஏன் இம்மருந்ததை நீங்கள் எடுக்கக்கூடாது?

(மருத்துவம் தொடரும்)

No comments:

Post a Comment

This I know God is for me | Promise Word | June 2026 | Ps Vinod Kumar

  GOD’S SHADOW MINISTRIES | PROMISE | JUNE 2026 Psa 56:9  Then my enemies will turn back in the day when I call. This I know, that God i...