Sunday, April 26, 2020

வாழும் தெய்வங்கள்….(இயேசு கண்ணீர்விட்டார்…தொடர்ச்சி)


                                                                                                                                                   
வாழும் தெய்வங்கள்….(இயேசு கண்ணீர்விட்டார்…தொடர்ச்சி)

(போதிக்கப்பட்டேன், ஒர் தொடர்ப்திவு - 10)



சமீப நாட்களில்  சமூகவலைதளங்களில் பிரபலம் ஒருவர் பகிர்ந்திட்ட கருத்து விமர்சிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.   கோயில்களை நாம் எவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறோமோ,  மருத்துவமனைகளையும் சுத்தமாக, சுகாதாரமாக பேணவேண்டும் என்றார்.  அருமை.

வழிபாடு ஸ்தலங்கள் மூடப்பட்ட நிலையில், நம் உயிர்காக்க விழிப்புடன் உழைத்துக்கொண்டிருக்கும், இல்லை இல்லை யுத்தமுனையில் போராடிவரும், நம்முடைய மருத்துவசேனை, காவல்படை, தூய்மைவீரர் நம்முடைய வாழும் தெய்வங்கள் என்று பாராட்டி பதிவிட்ட பதிவும் கண்டேன்! உண்மையில் நம் சகோதர, சகோதரிகள் பாராட்டக்குரியவர்கள்!

உண்மையில், இந்த நாட்களில் மக்கள் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் போன்ற எந்த தெய்வத்தலங்களுக்கும் போகமுடியாத நிலை.  சிறிய, பெரிய, புகழ்பெற்ற என்று மக்கள் அலைமோதக்கூடிய இடங்கெல்லாம் இப்போது அடைக்கப்பட்டுள்ளது.  என்னதான  மருத்துவ வசதிகள் பெருகினாலும், மருந்துக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியடைந்திருந்தாலும், அறிவியல் விஞ்ஞானத்தில் மனிதன் வானத்தின் எல்லையை எட்டியிருந்தாலும், வியாதியின் கூரை, அடிவேரை மனிதனால் இதுவரையில் ஒழிக்கமுடியவில்லை….அவனால் அதை ஒழிக்கவும் முடியாது என்பது உண்மை! ஏன்?

ஒரு பக்கம், இந்நூற்றாண்டில், மருத்துவ முன்னேற்றங்களினால் குணமடைந்து, உயிர்க்காக்கப்படடு, நாட்கள் நீடிக்கப்பட்டு பிழைத்திருப்போரின் எண்ணிக்கை  கோடானுகோடி என்பதும் உண்மை.  மருத்துவ சாதனைகளை நாம் மெச்சிக்கொள்ள வேண்டும்!  இன்னொரு பக்கம்,  மருத்துவர்களால் தீர்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, இறைநம்பிக்கை, இறைவேண்டுதல் மற்றும் இறையருளினால் அற்புத சுகத்தையும், அதிசய விடுதலையையும்  பெற்றவர்களின் எண்ணிக்கை  எண்ணிலடங்காது!  இன்றும், மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டு மறுவாழ்வு கிடைக்குமோ? என ஏங்குவோரை இறைப்பணியாளர் சந்தித்து, அவர்களிடம் ஆண்டவர் இயேசுவின் புண்ணியத்தை அறிவித்து அவர்களுக்காக பிரார்த்தனைகள் ஏறெடுத்து வருகின்றார்!  

மருத்துவத்தால் கூடாதவைகளை  மகிபன் இயேசுவின் கரங்கள் முடித்துக்காட்டியுள்ளதும் உண்மை!  மனித உருவில் அவதரித்த இயேசு தெய்வம் மனிதன் கட்டின ஆலயத்தில் வாசம்பண்ணுவதில்லையாம், அவர் மனிதன் எனும் ஆலயத்தில் வாசம் பண்ணுகிறாராம்! வாசம் பண்ணவே விரும்புகிறாராம்! அப்ப்டியானால்?

இன்று,  நம்முடைய மருத்துவமனைகளை,  ஏன் நம் வீட்டையும், நம் தெருக்களையும், அலுவலகங்களையும் கிருமிநாசினியை கொண்டும்,  கைகளை சோப்பை கொண்டும் நாம் அவ்வப்போது சுத்தப்படுத்திவருகிறோம்.  நல்லது.  சமூக விலகலும், சுகாதரமுமே நம்மை காக்கும் இரு கண்கள் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டவருகிறது! விலகலும் கழுவுதலுமே காக்கும்!

மருத்துவமனைகளை கோயில்களாகவும், மருத்துவர்களை தெய்வங்களாகவும் நாம் போற்றவேண்டும் என்ற கருத்து அதிகம் பகிரப்பட்டும்,  பலமாய் ஆமோதிக்கப்பட்டும் வருகிறது! 

ஆனால், ஒரு கேள்வி! ஒரு சிந்தனை.  மருத்துவத்தை தாண்டின ஒரு பார்வை.  தெய்வங்களையும் இந்த நோய் கொல்லுகிறதே! மருத்துவமனைகளும் மயானபூமியாகிறதே!   இவர்கள் வாழும் தெய்வங்கள் தானே?!

இறைவனின் பார்வையில், இவர்கள் மட்டுமல்ல - தேவனுடைய சாயலின்படி, தேவனுடைய ரூபத்தின்படி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் 'வாழவேண்டிய தெய்வம்'. உண்மை என்னவென்றால், அவன் இன்றல்ல, என்றைக்கோ தான் வாழ்வை இழந்துவிட்டான்…வாழ்வை இழந்தவனாகவே பிறக்கிறான்…வாழ்வை இழந்தவனாகவே வாழ்கிறான்...வாழ்வை இழந்தவனாகவே மரித்து அடக்கம்ண்ணப்படுகிறான்…அவன் கல்லறையை கண்டு  அவனை படைத்த இறைவன் -இறைமகன் கண்கலங்குகிறார்?

நாம் யார்?  வாழும் தெய்வங்களா? வாழ்வேண்டிய தெய்வங்களா?

1 comment:

  1. நல்ல பதிவு அண்ணா, நன்றி!

    ReplyDelete

The Blessings of Being with Jesus | Promise | April 26 | God's Shadow Ministries

  GOD’S SHADOW PROMISE APRIL 2026 THE BLESSINGS OF BEING WITH JESUS Mar 8:8  So they did eat, and were filled: and they took up of t...